Sunday, 25 February 2024

 வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை

முனைவர் பிரியாகிருஷ்ணன்.

பதிவு செய்த நாள் : 25.02.2024




அமைவிடம்:

தஞ்சைக்கருகில் வல்லம் என்ற ஊரிலிருந்து  3.5 கி மீ தொலைவில் வல்லம் காளி கோயில் ஒன்று உள்ளது. அங்கிருந்து ஆலங்குடி செல்லும் வழியில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் சாலையின் மேற்குப் பக்கத்தில் இக்கோயில் அமைந்துள்ளது

தலவரலாறு:

தலபுராணத்தில் ஏகவீரியம்மன் சருக்கத்தில் அம்மனின் சிறப்புகள் 47  பாடல்களில் சிறப்பிக்கப்படுகின்றன.108 நாமங்களும் சுட்டப்படுகின்றன. அம்மனுக்குரிய தேவி தீர்த்த சருக்கம் 16 விருத்தங்களைக் கொண்டுள்ளது. தல புராணத்தில் சொல்லப்பட்டுள்ள கதைப்படி, முன்னொருக் காலத்தில் பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சாசுரன் என்னும் அரக்கன் தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். இதனால் கலங்கிய தேவர்கள் சிவனிடம் தங்களைக் காக்கும்படி முறையிடுகின்றனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன் பார்வதியை தஞ்சாசுரனை அழிக்க அனுப்புகின்றார். தஞ்சாசுரனுடன் பார்வதி போரிடுகிறாள். ஆனால் அவனை எளிதில் அழிக்க இயலவில்லை.   அசுரனின் பல வடிவங்களை எடுக்கின்றான். அத்தனைக்கும் பார்வதி  பதிலடிக் கொடுக்கிறாள்.  ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுக்கிறான் அசுரன். அந்த எருமையினை  பார்வதி தன் சூலத்தால் குத்தி வதம் செய்கிறாள். இதனால் அவளுக்கு மேலும் உக்கிரம் அதிகமாகின்றது. பார்ப்பவர்களையெல்லாம் துன்புறுத்த ஆரம்பிகின்றாள். அசுரனிடம் தப்பித்து அம்பிகையிடம் சிக்கிக் கொண்ட தேவர்கள் மீண்டும் சிவனிடம் முறையிடுகின்றனர். சிவன் பார்வதியை  பார்த்து, ‘ஏ கவுரி சாந்தம் கொள் ’ என்று சொல்ல பார்வதியும்  சாந்தமானாள் என்று தலபுராணம் கூறுகின்றது. பார்வதியின்  கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற குளத்தில் மூழ்கி எழுந்தாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு ஏகவுரி அம்மனாக வடக்கு நோக்கி அமர்ந்து அருள்புரிந்து வருகிறாள். அம்மன் அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப் படுத்துகின்றனர் என்று சொல்லப்படிகின்றது.

சிற்பங்கள்:

மண்டபத்தின் முதலாம் பராந்தகன் காலத்தை சார்ந்த விநாயகர் சிற்பம் ஒன்றும், சண்டேகரர் சிற்பம் ஒன்றும் உள்ளன. மற்றொரு சண்டேசுரரின் சிற்பம் இராஜராஜன் காலத்தியதாயிருக்கலாம். இவை தவிர இரு உடைந்த் தலைகள் 13 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. முன் மண்டபத்தில் ஒன்றும் இரண்டாம் திருச்சுற்றில் ஒன்றுமாக இரு முருகன் சிலைகள் உள்ளன.இவை மிகவும் பிற்காலத்தச் சார்ந்தவை. கருவறையை நெருங்கும் முன்னர் தேவிக்கு அருகில் சுப்பிரமணியர் தனி மண்டபத்தில் அருள் பரப்புவதைக் காணலாம். அங்கேயே வாராகி, பிரத்யங்கரா, ஆதிசங்கரர், நாகர் போன்றோரின் சிலைகள் வழிபடப்படுகின்றன. கோயிலிலேயே ஒரு தூணுக்கு முன் சூலத்தை பதித்து பூஜிக்கிறார்கள். விமானம் முழுதும் பெண் தெய்வங்களின் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இரண்டாம் திருச்சுற்றில் காத்தான், இலாட சந்நியாசி, மதுரை வீரன், கறுப்பு ஆகிய தெய்வங்கள் சன்னதிகளும் குதிரை மீதமர்ந்த வீரன் சிற்பமும் உள்ளன.  

நாட்டுப்புறப் பாடலில் ஏகெளரி அம்மன்:

வல்லத்து ஏகெளரி வடக்குப்பாத்த செல்வி

நீலி கபாகி நிரந்ததோர் பஞ்சாட்சரி

நாலு மூல செளந்தரியே நாயகியே வாருமம்மா

என்ற நாட்டுப்புறப் பாடலில் இவ்வம்மனைக் குறித்து பாடப்பட்டுள்ளது.

பக்தர்களின் வேண்டுதலும் நம்பிக்கையும்:

கோவில் கருவறையில் ஏகெளரி அம்மனைச் சுற்றியபடி இரண்டு நாகங்கள் இருப்பதை காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு, கேது தோஷம் நீங்கும் தலம். இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.  திருமணத்தடை,  குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு மிகச்சிறந்த பரிகார தலமாக உள்ளது. திருமண தடை உள்ள பெண்கள் இங்கே வந்து அம்மனுக்கு புடவை சாத்தி, அம்மனின் திருப்பாதத்தில் மஞ்சள் வைத்து வணங்குகின்றனர். அதில் இருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். உடல் நலமில்லாமல் இருப்பவர்கள் தாங்கள் உடல் நலம் பெற்றால் அம்மனுக்கு எருமைக்கன்றை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள். ஏகெளரி அம்மன் கோவிலில் பிராது கட்டும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. சொத்தை பறிகொடுப்பது, திருட்டு போன்ற சம்பவங்களுக்கு அம்மனிடம் பிராது கொடுப்பதால் நியாயம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவங்களை கோவில் பூசாரியிடம் ஒரு வரிவிடாமல் கூறுவார்கள். அதற்கு பூசாரி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து முறையிடுவார். இதைக்கேட்டு ஏகெளரி அம்மன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச்செய்கிறாள் என்பது ஐதீகம். இங்ஙனம்  ஏகெளரி அம்மன் கோவில் ஒரு பிரார்த்தனை தலமாகவும் விளங்குகின்றது.


Saturday, 24 February 2024

வின்செண்ட் வில்லியம் வான் கோவின் வாழ்க்கை வரலாறு -1


வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (இடச்சு: [ˈvɪnsɛnt ˈʋɪləm vɑn ˈɣɔx] (கேட்கⓘ); (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது.

இவர் ஒரு உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். வான் கோக் குழந்தைப்பருவத்திலிருந்து தீவிரமான அதே சமயம் அமைதியான சிந்தனையாளராக வளர்ந்தார். இவர் இளைஞராக இருந்தபோது முதலில் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார், வேலை நிமித்தமாகப் பயணங்களை மேற்கொண்டார், ஆனால் அவர் லண்டனுக்கு மாற்றப்பட்ட பின்னர் மனச்சோர்வடைந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், அவர் மதப்பணிக்கு வந்து, தெற்கு பெல்ஜியத்தில் ஒரு புராட்டஸ்டன்ட் மிஷனரியாக நேரத்தைச் செலவிட்டார். அங்கு மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களைப் பார்த்து இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். 1881 ஆம் ஆண்டில் ஓவியம் வரைவதற்கு முன், அவர் உடல் நலமின்றியும் தனிமையிலும் இருந்தார், பின் அவரது பெற்றோருடைய வீட்டிற்குச் சென்றார். அவரது தம்பி தியோ அவருக்கு நிதி உதவி செய்துவந்தார். அவரது முந்தைய படைப்புகள், பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் காட்டும் சித்திரங்கள் ஆகியனவாக இருந்தன. 1886 இல், அவர் பாரிஸ் நகருக்குச் சென்றார், அங்கு அவர் எமிலி பெர்னார்ட் மற்றும் பால் கவுஜின் உட்பட அங்கத்துவ கலை இயக்க உறுப்பினர்களைச் சந்தித்தார், இவர்கள் உணர்வுப்பதிவுவாத கலை இயக்கத்துக்கு எதிராகப் பேசினர்.

வான் கோக் மனநோய் மற்றும் மருட்சிகளால் அவதிப்பட்டார், மேலும் அவரது மன உறுதியற்ற தன்மையக் குறித்து அவர் கவலையடைந்தபோதிலும், அவர் அவரது உடல் ஆரோக்கியத்தைப் புறக்கணித்தார், ஒழுங்காகச் சாப்பிடாமல், பெரிதும் குடித்தார். வறுமையால் அவருக்குக் கோபம் அதிகரித்தது. ஒரு சமயம் கோபத்தில் அவர் தனது இடது காது பகுதியைத் துண்டித்துக்கொண்டார். அவர் ஒரு காலகட்டத்தில் செயிண்ட்-ரெமியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப் பெற்றார். அவர் மருத்துவமனையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, பாரிஸ் அருகிலுள்ள ஆவெர்ஸ்-சூர்-ஓஸ்ஸில் உள்ள ஆபுர்கெ ரவொக்ஸிற்கு குடிபெயர்ந்த பிறகு, ஹோமியோபதி மருத்துவரான பால் காகேட்டையின் கவனிப்பில் இருந்தார். அவரது மன அழுத்தம் தொடர்ந்து, சூலை 27, 1890 இல், வான் கோக் மார்பில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். காயமுற்ற இரண்டு நாட்களுக்கு பின்னர் இறந்தார்.

இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.

இளமை

வின்செண்ட் வில்லியம் வான்கோ நெதர்லாந்தில் உள்ள குரூட் சுண்டெர்ட் எனுமிடத்தில் 1853-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.[1][2] வான்கோ பிறப்பதற்கு முன்பே சரியாக ஓராண்டுக்கு முன்னர் அதே தேதியில் பிறந்த அவரது அண்ணன் சில வாரங்களில் இறந்து போனார் எனவே அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியிருந்தது. அந்த மரணத்திற்கு பின் பிறந்ததால் அண்ணனுக்கு வைத்த பெயரையே அவருக்கும் வைத்தனர்.[note 1] இது தெரிந்தபோது வான்கோவுக்கு ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை ஏற்படத் தொடங்கியது. அண்ணன் பெயரை தாங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் அதற்கு காரணமாயிருந்திருக்கலாம். வான் கோவின் தந்தை தியோடரஸ் வான்கோ ஒரு மதபோதகராக இருந்தார் ஓவியமும் மதமும் இவரது குடும்பத்தில் இரு முக்கியப்பணியாக இருந்தது.[3][4] வான்கோவின் சகோதரர் தியோ வான்கோ ஒரு புகழ்பெற்ற ஓவியராவார். இவர் 1857, மே 1 ஆம் நாள் பிறந்தார். இவரது மற்றொரு சகோததரர் கோர். வான்கோவுக்கு சகோதரர்களத் தவிர எலிசபெத், அன்னா, வில்லிமினா என்ற மூன்று சகோதரிகளும் இருந்தனர்.[5] அதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை. தாழ்வு மனப்பான்மையும், குடும்ப வறுமையும் வான் கோவை முன்கோபியாகவும், முரடனாகவும் மாற்றியது. தேவலாயத்தில் உபதேசம் செய்யும் தந்தையால்கூட வான் கோவை அடக்க முடியாமல் போனது.

கல்வி

வின்சென்ட் அண். 1866, அண். வயது 13

குழந்தைப்பருவம் முதலே மிக இறுக்கமான மனநிலையில் இருந்த வான்கோ 1860 இல் சுண்டெர்ட் கிராமத்தில் இருந்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு 200 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் மட்டுமே பாடம் போதித்தார் 1861 முதல் 1864 வரை வான்கோவும் அவரது சகோதரி அன்னாவும் வீட்டிலேயே பாடம் பயின்றனர். பின்னன் 20 கி. மீ தொலைவில் உள்ள செவென்பெர்கெனில் 'சான் புரொவிலி உண்டு உறைவிடப்பள்ளி'யில் சேர்க்கப்பட்டார். தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்தது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. 1866 செப்டம்பர் 15 இல் தில்பர்கில் உள்ள இரண்டாம் வில்லியம் கல்லூரியில் சேர்ந்தார்.ஆனால் அவருக்கு படிப்பின் மீது நாட்டம் இல்லை.[6] இருந்தாலும் அவரை அரித்து வந்த தாழ்வு மனப்பான்மை மனச்சோர்வாக மாறத்தொடங்கியது. எனவே வெளியூரில் ஓவியக்கூடம் நடத்தி வந்த உறவினர் வீட்டிற்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு சென்றபோதுதான் அவருக்கு ஓவியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அங்கு பாரிசின் புகழ்பெற்ற ஓவியரான கான்டாண்டைன் சி.ஹுயிமன் என்பவர் ஆசிரியராக இருந்தார். சிறுவயது முதலே ஓவியத்தில் ஈடுபாடுமிக்கவராகத் திகழ்ந்த வான்கோவுக்கு அவர் முறைப்படியான ஓவியக்கலையை போதித்தார்.[7]

காதல்

வான்கோவின் ஓவியம் 87 ஹாக்ஃபோட் வீதி

பெற்றோரின் அன்பும், உடன் பிறந்தவர்களின் அன்பும் இல்லாமல் வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாத வான்கோவுக்கு அவரது மாமா செண்ட் என்பவர் உதவியாக இருந்தார். அவர் வான்கோவுக்காக 'தி ஹேக்'கில் ஒரு ஓவியக் கூடத்தில் பணியில் சேர உதவினான் சில நாள் பயிற்சிக்குப் பிறகு அவ்வோவியக் கூடம் லண்டனுக்கு மாற்றப்பட்ட காரணத்தால் வான்கோவும் லண்டன் செல்லவேண்டியதாயிற்று.[8] இப்பணியில் அவர் வெற்றிகரமாக ஈடுபடவும் பணம் சம்பாதிக்கவும் செய்தார். இதுவே அவர் மகிழ்வாக இருந்த காலமாகும். அன்புக்காக ஏங்கியதாலோ என்னவோ தாம் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் பெண் யூகினி லோயர் என்பவரை நேசிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது காதலை அந்த பெண் ஏற்றுக்கொள்ள மறுக்கவே அவரது சோகமும், மனச்சோர்வும் அதிகமானது. இது அவரது நடவடிக்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது.[9]

பணிகள்

இலண்டன் திரும்பிய வான்கோ ஊதியமில்லாமல் ஒரு சிறு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். அங்கு அவர் காணும் காட்சிகளை ஓவியமாக வடிக்கத் தொடங்கினார். பள்ளியின் உரிமையாளர் மிடிலெசெக்சுக்குக் குடிபெயர்ந்ததால் வான்கோவும் உடன் சென்றார்.[10] வாழ்க்கையில் என்ன செய்வது? என்று தெரியாமல் பலமுறை குழம்பினார் வான் கோ.[6] தந்தையைபோல எளிமையாக மதபோதகர் ஆகலாமா என்றுகூட அவர் யோசித்தார். சுமார் ஓராண்டு வாஸ்மெஸ் என்ற நிலக்கரி சுரங்க ஊழியர்களின் கிராமத்தில் அவர் மதபோதனையில் ஈடுபடார்.


அங்கு இவர் வரைந்த ‘தி பொட்டேட்டோ ஈட்டர்ஸ்’ ஓவியம் உலகப்புகழ் பெற்றது. கிறித்துமசு விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும்போதும் விவிலியத்தை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்தார்[11]. மதபோதகார இருந்தபோது வான்கோ தன்னைத்தானே வருத்திக்கொண்டு இறைச்சியை உண்ணாது மரக்கறி உணவுகளையே உண்டு கடும் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.[12][13][note 2] அவரது போதனை முறைகளை ஏற்காத தேவாலாயம் அவரது பதவியை பறித்தது.[14] எனவே வான்கோ பிரெஸ்ஸல்சு சென்றார்.



ஓவியங்கள்

வான்கோ விலைமாதர்களில் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். ஆனால் இல்லற வாழ்க்கை அவருக்கு கொடுமையானதாக அமைந்தது. பல ஆண்டுகள் பொறுத்த அவர் கடைசியில் மணமுறிவு செய்துகொண்டார். மனதை ஒருநிலைப்படுத்தி ஓவியத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்தபோது அவருக்கு வயது 33. அப்போதும் அவர் வறுமையிலேயே காலம் தள்ள வேண்டியிருந்தது. வண்ணமும் தூரிகையும் வாங்குவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை. தன் சகோதரன் தியோ அவ்வபோது கொடுத்த பணத்தைக் கொண்டு காலத்தை ஓட்டிய வான் கோ ஓவியங்கள் வரையத்தொடங்கினார். தன் கவனம் முழுவதையும் ஓவியங்கள் மீது பதித்தார். ஆதிகால குகை ஓவியங்கள், கேட்விக் ஓவியங்கள். மறுமலர்ச்சி ஓவியங்கள், உணர்ச்சிமிகு ஓவியங்கள் இயற்கை ஓவியங்களின் என தனது ஓவியத்தில் ஒரு புதிய பரினாமத்தை ஏற்படுத்தினார் வான் கோ. 'உணர்வு வெளிப்பாடு' என்ற புதியபாணியை அவர் தன் ஓவியங்களில் அறிமுகம் செய்தார். அவருடைய ஓவியங்கள் பளிச்சென்று வண்ணமயமாக இருக்கும். அவர் வரைந்த ஓவியங்களில் உலகப்புகழ் பெற்றது பன்னிரண்டு சூரியகாந்தி பூக்கள் நிறைந்த பூச்சாடி ஓவியம் ஆகும்.

30 வயதிற்கு மேல் ஓவியம் வரைய ஆரம்பித்தாலும் வான் கோவின் கடைசி ஆறு ஆண்டுகளில் சுமார் 700 தூரிகை ஓவியங்களையும், 800 எண்ணெய் ஓவியங்களையும் வரைந்தார். ஆனால் அவற்றில் ஒரே ஒரு ஓவியத்தை மட்டுமே வான்கோவாவால் விற்க முடிந்தது. அதுவும் வீட்டு வாடகை கடனுக்காக அந்த ஓவியத்தை வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது. ஒருமுறை மனச்சோர்வு முற்றியபோது வான்கோ கத்தியை எடுத்து தனது ஒரு காதை அறுத்துக்கொண்டார். பின்னாளில் காதில் கட்டுபோட்ட மாதிரி தமது உருவத்தைத் தானே வரைந்தார் வான் கோ.

இறப்பு

அவரது மனச்சோர்வு அதிகரிக்க அதிகரிக்க அவர் மனநிலை மருத்துவமணைக்கு போவதும் வருவதுமாக இருந்தார். வாழ்க்கை முழுவதும் ஒரு வித மனநோயாளியாக சோகத்திலேயே வாழ்ந்த அவர் தனது 37 ஆம் வயதில் 1890 ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் துப்பாக்கியால் தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டார்.[15] ஆனால் அவர் சுட்டுக்கொண்டதாகக் கூறப்படும் துப்பாக்கி இதுவரை கண்டறியப்படவில்லை.[16] இரண்டு நாட்கள் கழித்து 1890 ஆம் ஆண்டு சூலை 29 ஆம் நாள் அவர் உயிர் பிரிந்தது. அவரது சகோதரர் தியோவிடம் பேசிய அவரது கடைசி வார்த்தை 'துயரம் என்றும் தொடரும்' ‌என்பதாகும்.[15][17] வின்சென்ட் வான் கோ குறித்து பல்லாண்டு காலம் ஆய்வு செய்து, அவரது வாழ்க்கை சரிதத்தை எழுதியவர்களான ஸ்டீவன் நைபே, மற்றும் கிரெகோரி ஒயிட் ஸ்மித் ஆகிய இருவர் வான் கோ தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் இரண்டு உள்ளூர் சிறுவர்கள் அவரை தவறுதலாகச் சுட்டுவிட்டனர் என்றும் , அவர்களைப் பாதுகாக்க காவல் துறையினரிடன் வான் கோ பொய் சொன்னார் என்று கூறுகிறார்கள்.[18] வாழ்ந்தபோது அவரது படைப்புகளை மதிக்காத உலகம் அவர் இறந்த பிறகு அவற்றை விலை மதிக்க முடியாதவை என்று வியந்தது. 1990-ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற 'கிரிட்டிக்ஸ்' ஓவிய ஏலத்தில் வான் கோவின் 'டாக்டர் கேச்' (Portrait of Dr. Gache) என்ற ஓவியம் $0 கோடி அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது.

நன்றி - விக்கிபீடியா .




 

கவிதைகள் ...ரசிக்க.....


பறவையின் இசை ஒலிகள்

மனிதரின்
உறக்கம் கலைத்திடும் மங்கிய
உதயப் பொழுதில் !
முடிவிலாக் கடவுளின்
உன்னத
மகத்துவம் பாடும் போது
மனிதரை
ஒன்று படுத்த
அழைப்பிதழ் அனுப்பிடும்
புள்ளினத் தின்
இசை ஓசை !

                          கலில் கிப்ரான் -தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



தீயிக்குத் தீராத தாகம் !
வேனிற் காலம்
எல்லா வற்றையும் எரித்து
வெந்திடச் செய்யும்.
பச்சை இலைகளைப் பின்னி
ஏடன் பூங்காவைக்
கட்டி முடிக்கும் !
காரணம்,
கரிய முகம் கொண்ட
காசினி
இன்னலுற விழைவ தில்லை !

           பாப்லோ நெருடா - ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Sunday, 24 December 2023

 

பழந்தமிழரின் வேர்களை

மயில் - மயிலார் - மயிலாறு – பூச பாவாடை – பெண்களின் விரதம்

 


https://www.youtube.com/watch?v=JKiZyUBI1bE

வெற்றிலைக்கு இத்தனைப் பெயர்களா?

 



பழந்தமிழரின் வேர்களை தேடும் விழுதாய்….. நான் முன்னெடுக்கும் தொன்மை அறிவோம் : தமிழரின் பண்பாட்டுப் பதிவுகள் முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன். நமது வரலாற்றை அனைத்து மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உயர்வான எண்ணத்தில் - தொன்மை அறிவோம் : தமிழரின் பண்பாட்டுப் பதிவுகள் - என்ற தலைப்பில் தக்க அறிஞர்களின் நூல்கள் வாயிலாக அறிந்த அரிய செய்திகள், எனது தொல்லியல் சார்ந்த கள ஆய்வுகளின் வாயிலாக நான் பதிவு செய்தவை மற்றும் அறிந்தவை, இணையவழி கிடைத்த சில தரவுகள் என எல்லாவற்றையும் இணைத்து ஆய்வு செய்தும், சிலவற்றை அதில் உள்ளவாறும் இங்குப் பதிவு செய்திருக்கிறேன்.தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றிவரும் என்னை அறிந்த தமிழ் சான்றோர்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள் அனைவருக்கும் எனது அன்பும் வணக்கமும் உரித்தாகுக. இந்த செய்திகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் subscribe செய்து அனைவருக்கும் பகிர்ந்து ஊக்கமூட்டும் நல்ல commentகளை பதிவு செய்து எனது தமிழ்ப்பணியில் உங்களது அனைவரின் பங்களிப்பையும் தந்து உதவும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். நன்றியும் பேரன்பும் உரித்தாகுக முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன்.



https://www.youtube.com/watch?v=RcpYHrykWno  

ஆண்டாள் அருளிய திருப்பாவை

ஆண்டாள் திருவடி சரணம்




 பன்னு திருப் பாவைப் பல் பதியம்! – இன்னிசையால்

பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை

பாடி அருள வல்ல பல் வளையாய் – நாடி நீ

வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்

நாங் கடவா வண்ணமே நல்கு!




மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்     1


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரமனடி பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.   2



ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.     3






ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்

பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.  4


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.   5




புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.   6




கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து

வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?

தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.   7



கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.   8




தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான்

ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்    9



நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.    10




கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!

புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி! நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.     11



கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால்சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.    12



புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.    13




உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.   14



எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?

சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.   15



நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய

கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.   16




அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்

எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த

உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.   17



உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.  18



குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்

மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.    19

 


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய்

செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்    20




ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.   21



அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்     22




மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்   23



அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி

பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி

கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி

குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்   24



ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்க்ல னாகித் தான் தீங்கு நினைத்த

கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்

நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்   25



மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே

சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.    26




கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்

பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடுபுகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.    27




கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை

பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.  28



சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்    29




வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்

செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்    30


கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்

சோதி மணிமாடந் தோன்றுமூர் – நீதியால்

நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்

வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்

ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பது வம்பு




திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே

ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே

உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே

மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே

வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே





  வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை முனைவர் பிரியாகிருஷ்ணன். பதிவு செய்த நாள் : 25.02.2024 அமைவிடம்: தஞ்சைக்கருகில் வல்லம் என்ற ஊரில...